சினுவா ஆச்சிபி பற்றி சிறியதொரு குறிப்பை முன்வைப்பது கடினம். ஆபிரிக்க இலக்கியத்தின் பிதாமகனென இவர் கொண்டாடப்படுகிறார். 1958-ல் வெளிவந்த சினுவா ஆச்சிபியின் ‘Things Fall Apart’ நாவலின் மூலமாகவே ஆப்பிரிக்க நாவல் இலக்கியம் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவரது முதல் நாவல் உலகம் முழுவதும் 8 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகியிருப்பதோடு, 45 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளது.

‘No Longer At Ease’, ‘Arrow of God’, ‘ A Man of the People’, ‘The Anthills of the Savannah’ ஆகியன இவர் எழுதிய ஏனைய நாவல்களாகும். ‘Girls at War and Other Stories’ இவரது ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பாகும். ‘Beware Soul Brother’ இவரது காவிய நூலாக உள்ளதோடு, இவரது இலக்கிய மற்றும் விமர்சனக் கட்டுரைகள் ‘Morning Yet on Creation Day’ எனும் பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இவர் நைஜீரிய அரசியல் குறித்து எழுதிய படைப்புக்களையும், இவரது சிறுவர் கதைகளையும் கூட கவனத்தில் கொள்ள வேண்டும்.

நைஜீரியாவினதும், உலகில் ஏனைய நாடுகளினதும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகக் கடமையாற்றிய இவருக்குப் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களினது பேராசிரியர் பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது. நைஜீரியாவின் அதியுயர் விருதான நைஜீரியா தேசிய விருது கிடைத்துள்ளது. இவரது இலக்கியப் படைப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளவை ஏராளம். அவற்றுள் மிகவும் விஷேடமானதாகக் குறிப்பிடப்படுவது, 1990-ல் இவரது 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச விழாவில் முன்வைக்கப்பட்ட ‘Eagle on Iroko’ தொகுப்பாகும்.

***

 

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book